Tuesday 28 August 2018

கல்லப்புறா Collared Dove

கல்லப்புறா Collared Dove

தனது கழுத்தில் இருக்கும் கருப்புநிறக் கோட்டின் காரணமாக Collared Dove என்ற பெயர் பெற்றிருக்கும் இப்புறாக்களை நமது வீட்டருகிலேயே எளிதாகக் காணலாம். கல்லப்புறா என நாட்டுமக்கள் அழைப்பதைக் கேட்டிருக்கலாம். இவை தானியங்களைப் பொறுக்கும்போது சிறு கூழாங்கற்களையும் சேர்த்து விழுங்குகின்றன. இக்கற்கள் அவற்றின் தொண்டைப்பகுதியில் தங்கி, உணவை கூழாக அரைக்கின்றன.
கோழிகளும் இவ்வாறு செய்வதைப் பார்த்திருப்பீர்கள். வேட்டைக்காரர்கள் இதன் தொண்டைப்பகுதியைக் 'கல்குடல்' எனவும் அழைத்திருக்கிறார்கள். கற்களையும் சேர்த்து உண்பதால் 'கல்லப்புறா' எனப் பெயர் பெற்றது.
பட்டினப்பாலையில் 58 ஆவது வரியில் புலவர் இப்புறாவை
" தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும் "
எனக் குறிப்பிடுகிறார்.
அதேபோல்
கலித்தொகை 56 ஆவது பாடல் 16 ஆவது வரியில்
" தூது உண் அம் புறவு எனத் துதைந்த நின் எழில் நலம் "
எனவும் புலவர் குறிப்பிடுகிறார்.
தூதுணம் = தூது + உணம்
தூது = கல், உணம் = உண்கிற
அதாவது கல்லை உண்கிற எனப்பொருள்.
- பாலா பாரதி


No comments:

Post a Comment