Tuesday 28 November 2017

குருகு

"நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து ...
போனவன் போனான்டி ... ஹோய்
நீரை எடுத்து நெருப்பை
அணைக்க...
வந்தாலும் வருவான்டி...
ஹோய்..."
குருகு / Bittern
சங்ககாலத்தில் மிக நுணுக்கமான முறையில் பதிவு செய்யப்பட்ட பறவைகளுள் இதுவும் ஒன்று.
கபிலரின் குறுந்தொகைப் பாடலில்:
“யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”
(குறு – 25)
பிறரறியாமல் தலைவனும் தலைவியும் காதலிக்கின்றனர். ஊரறிய மணம் செய்துகொள்ள நினைக்கின்றாள் தலைவி. ஆனால், தலைவனோ, மணம் புரியக் காலம் நீட்டிக்கின்றான். தலைவிக்கோ, மனதில் குழப்பம். காதலித்தவன் ஒருவேளை தன்னை கைவிட்டு விட்டால் என்ன செய்வது? என்று!
இப்படிப் பதறுகின்ற பெண்ணின் இயல்பான புலம்பலைப் பதிவு செய்திருக்கின்றார் புலவர்.
“நான் அவனுடன் கூடிய அந்நாளில் தினைச்செடியின் அடித்தாள் போல் சிறிய மென்மையான கால்களைக் கொண்ட, ஓடும் நீரில் ஆரல்மீனை பார்த்ததுபோல நின்ற குருகும் அருகே இருந்தது”
இதில் சுவையான செய்தி மறைந்துள்ளது. புதர்களின் ஓரம் மறைந்திருக்கும் இப்பறவையைப் பார்ப்பது சற்று கடினமே. வயல்களிலேயே நடமாடுகிறவர்களுக்குக்கூட அவ்வளவு எளிதில் தென்படாது. கூச்ச சுபாவம் மிக்கது. நாணல்களுக்குள் ஒளிந்து உட்கார்ந்திருக்கும்.
இந்த கண்ணில் படுவதற்கே அபூர்வமான பறவை ஒன்றே எங்கள் காதலுக்கு சாட்சி எனக் காதலியின் கூற்றில் துயரம் மறைந்துள்ளது.
-பாலா பாரதி


No comments:

Post a Comment