Thursday 22 December 2016

ஆள்காட்டி

"காட்டிக் கொடுத்தது...நீயா...இல்லை...நானா..."

கணந்துள் | ஆள்காட்டி | Lapwings | Trichy | Dec'16

பறவைகளைப் பார்க்கப் போகும்போது நான் பயப்படுவது இப்பறவைக்குத்தான். தொலைவிலேயே நம்மைப் பார்த்து எச்சரிக்கை அடையும் இந்த ஆள்காட்டிகள் குறிப்பிட்ட தொலைவு நெருங்கியவுடன் பெருங்குரலில் 'Did you do it? ...Did you do it?'... என்று கத்திக்கொண்டே பறந்து மற்ற பறவைகளுக்கு நமது வரவை அறிவித்துவிடும். பிறகென்ன பறவைகளை நாம பார்கிறோமோ இல்லையோ பறவைகளெல்லாம் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கும்.
இதன் காரணமாக இந்தப் பறவையை வேட்டையாளர்கள் வெறுப்பர். ஜிம்கார்பெட் என்ற வேட்டையாளர் விலங்குகளுக்கு வேட்டையாளரைக் காட்டிக் கொடுக்கும் பறவைகளில் ஒன்றாக இந்த ஆள் காட்டியைக் குறிப்பிட்டுள்ளார். குரங்குகள், மயில்கள், காரிக்குருவிகளும் இத்தகைய பழக்கமுடையன என்று கூறுகிறார்.
இது இதனுடைய குரலால் இவ்வாறு எச்சரிக்கை செய்யும் செயல்

"ஆற்றிய லிருந்த இருந்தோட டஞ்சிறை
நெடுங்கால் கணந்துள் ஆளறி வுறீஇ
ஆறசெல் வம்பலர் டைதலை பெயாக்கும்"
- மலையுடைக் கானம்
(குறுந்தொகை 350)

இவை கூடுகட்ட அதிக முயற்சி எடுத்துக்கொள்வதில்லை. தரிசு நிலத்தில் சரளைக் கற்களைவட்டமாகக் குவித்து முட்டையிடும்.
இங்கு ஆள்காட்டிக் குருவியில் இருவகைகள் காணப்படுகின்றன. அண்மையில் பழுப்புநிற ஆள்காட்டி காணப்பட்டதாகச் செய்தியும் உள்ளது. கண்ணைச் சுற்றி மஞ்சள்நிறத் தோலைக் கொண்டவை மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow Wattiled Lapwing) என்றும் கண்ணைச்சுற்றி சிவப்புத் தோலை உடைய ஆள்காட்டி குருவியைச் சிவப்பு மூக்கு ஆள்காட்டி (Red Wattiled Lapwing) என்றும் அழைப்பர்.
பொதுவாக, மஞசள் மூக்கு ஆள்காட்டி வறட்சியான திறந்த வெளிகளிலும் கற்பாங்கான நிலத்திலும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி நீர்நிலைகளுக்கு அருகாமையிலும் காணமுடியும்.
இத்தகைய மற்ற பறவைகளின் உற்ற தோழனாக விளங்கும் ஆள்காட்டிக் குருவிகளுடன் பழகிய நாட்டுமக்கள் தங்களுடைய இன்ப துன்பங்களைக்கூட ஆள்காட்டிக் குருவியின் மேலேயேற்றிப் பாடிய அருமை, அழகு போற்றத்தக்கது.

“ஆக்காட்டி ஆக்காட்டி ஆவரம்பூ ஆக்காட்டி
எங்கே எங்கே முட்டையிட்டே
கல்லுத் துளைத்துக் கடலோரம் முட்டையிட்டேன்
இட்டது நாலுமுட்டை பொரித்தது மூணுகுஞ்சு
மூத்த குஞ்சுக் கிரைதேடி மூணுமலை சுற்றி வந்தேன்
இளைய குஞ்சுக் கிரைதேடி ஏழுமலை சுற்றி வந்தேன்
பாத்திருந்த குஞ்சுக்குப் பவளமலை சுற்றி வந்தேன்.
புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகையிலே
மாயக் குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்
காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க
நானழுத கண்ணீரும் என்குங்சழுத கண்ணீரும்
வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கா கால்கழுவிக்
குண்டு நிறைந்து குதிரைக் குளிப்பாட்டி
இஞ்சிக்குப் பாய்ஞ்கு இலாமிச்சுக்கு வேரூண்டி
மஞ்சளுக்குப் பாய்ஞ்சு மறித்துதாம் கண்ணீரே”

இந்த நாட்டுப்பாடல் உணர்ச்சியை வடித்தெடுத்து உருவாக்கிப் பாடிய பாட்டு. இதை வெவ்வேறு ஊர்களில் சிறிய மாற்றங்களுடன் பாடக் கேட்டிருக்கிறேன். ஆள்காட்டி தன்துயரைக் கூறுவதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருந்தாலும். மக்கள் தங்கள் பாடுகளை நினைத்துப் பாடுவார்கள் போலுள்ளது, அவ்வளவு உருக்கம்.
சில இடங்களில் இவற்றை 'அக்காண்டி' எனக் கூறக்கேட்டிருக்கிறேன். இவை ‘இட்டி..இட்டி..’ என்று விட்டுவிட்டு ஒலிப்பதால் இதை ‘இட்டி இட்டிக் குருவி’ என்று மலையாளத்தில் அழைப்பராம்.

- பாலா பாரதி

2 comments:

  1. I have read this poem in "Sanga illakiathial pullina villakkam" by L. R. Swamy. yes, it ia a nice poem.

    ReplyDelete
  2. ஆக்காட்டி ஆக்காட்டி ஆவரம்பூ ஆக்காட்டி
    எங்கே எங்கே முட்டையிட்டே
    கல்லுத் துளைத்துக் கடலோரம் முட்டையிட்டேன்
    இட்டது நாலுமுட்டை பொரித்தது மூணுகுஞ்சு
    மூத்த குஞ்சுக் கிரைதேடி மூணுமலை சுற்றி வந்தேன்
    இளைய குஞ்சுக் கிரைதேடி ஏழுமலை சுற்றி வந்தேன்
    பாத்திருந்த குஞ்சுக்குப் பவளமலை சுற்றி வந்தேன்.
    புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகையிலே
    மாயக் குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்
    காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க
    நானழுத கண்ணீரும் என்குங்சழுத கண்ணீரும்
    வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கா கால்கழுவிக்
    குண்டு நிறைந்து குதிரைக் குளிப்பாட்டி
    இஞ்சிக்குப் பாய்ஞ்கு இலாமிச்சுக்கு வேரூண்டி
    மஞ்சளுக்குப் பாய்ஞ்சு மறித்துதாம் கண்ணீரே

    ReplyDelete