Thursday 22 December 2016

சிறிய மீன்கொத்தி

"சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே...
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே..."

சிரல் | சிறிய மீன்கொத்தி | Oriental Dwarf Kingfisher | Vaduvoor | Dec'16 |


மஞ்சள் நிறமான அடிப்புறமும் நீல நிறமான முதுகுப்புறமும் உடைய சிறிய அளவிலான ஒரு பறவை நீர்நிலைகளுக்கருகில் உயரம் குறைவான மரங்களிலும் குச்சிகளிலும் உட்கார்ந்துகொண்டு நீர்ப்பரப்பை நெடுநேரம் நோக்கியிருந்து திடுமெனப் பாய்ந்து நொடிப்பொழுதில் வெள்ளி மீனைச் செம்பொன் அலகில் கௌவிச் செல்லும் காட்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். இந்த சிறிய மீன்கொத்திப் பறவையைத்தான் சங்கஇலக்கியங்களில் 'சிரல்' என்று அழைத்தனர்.
சங்க காலத்தில் இந்தப் பறவையைக் கண்ட புலவர்கள் மிக அழகாக வர்ணித்துள்ளார்கள். நீலமும் பச்சையும் கலந்த நிறமுடைய மீன்கொத்தியாதலால் நீலமணிக்கு ஒப்பிட்டுச் சங்க நூல்கள் கூறும் ‘மணிச்சிரல்’ (பெரும்பாண்.314)
‘மணி நிறச் சிறு சிரல்’ என்று அழைக்கப்படுகின்றது. இதன் உடல் அழகிய நிறங்களுடன் கூடி இருத்தலையும் குறிப்பிட்டுள்ளனர்.

“வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச்
சிரற்சிற கேய்ப்ப வறற்கண் வரித்த
வண்டு ணறுவீ துமித்த நேமி.”
- அகம். 324

காற்று வலிமையுடன் அடித்தலால் பல நிறப் பூக்கள் மணலில் வரித்திருப்பது மீன் கொத்தியின் சிறகுகள்போல இருந்ததாகக் கூறியதைக் காணலாம்.
இம்மீன்கொத்தியின் உடலில் நீலம், பச்சை, சிவப்பு ஆகிய மூன்று நிறங்களும் இருப்பதைக் காணலாம். இதன் அலகு சிவப்பாக இருப்பதை அழகிய உவமையால் விளக்கியுள்ளனர்.

“படுமழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல்வா யுற்ற தளவிற் பரலவற்.” - நற்றிணை.61
“பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை
ஆடு சிறைவண் டழிப்ப.” - ஐங்குறுநூறு.447

செம்முல்லை என்றழைக்கப்படும் தளவின் அரும்பு நீண்டு சிவந்த கூர்மையாக இருக்கும். அதுபோன்று சிரலின் வாய் இருந்ததாகப் புலவர்கள் உவமையாகக் கூறுவது சுவையானது.
மீன் கொத்தியின் சிவந்த வாயை அலகைக் கருதியே பிற்காலத்தில் ‘பொன் வாய்ப்புள்’ என்று பெயர் தந்தனர். தட்டான் பூச்சியைப் போன்று நீர் நிலைகள்மேல் பறந்துகொண்டிருப்பதால் பொன் வாயையுடைய தட்டான் எனும் பொருள்படும்படி 'பொன்னாந்தட்டான்’ என்றும் மக்கள் இவற்றை அழைப்பதும் நோக்கத்தக்கது.
திருக்கள்ளியின் நுனியில் காணப்படும் முள்ளோடு கூடிய சதைப்பற்றான உருண்டையான முறுக்கின தண்டு ஏறக்குறைய மீன் கொத்தியின் தலையைப் போன்று தொலைவில் பார்ப்போருக்குத் தோன்றும் இதையே ‘சிரல்தலைக்கள்ளி’ என்று நற்றிணை கூறியது.
மீனைப் பிடிக்க நீர் நிலையில் செல்லும்போது ‘சிச்சி’ ‘சிச்சி’ என்று அடிக்கடி ஓசையிட்டுச் செல்லும். இந்த ஓசையின் காரணமாகவே ‘சிச்சிலி’ என்ற பெயரும் வழங்களாயிற்று.

- பாலா பாரதி


No comments:

Post a Comment