Thursday 22 December 2016

காட்டுக் கோழி

"கூவும் கோழி இங்கே வா...
கூவி எழுந்திடச் சொல்லித்தா..."

காட்டுக் கோழி | Junglefowl | Masinakkudi | Nov'16

காட்டுக் கோழிகள் சத்தமாக கத்தும் இயல்புடையவை. இவை அடர்ந்தக் காட்டுப்பகுதியில் காணப்படும். கானக் கோழி என்றும் அடவிக்கோழி என்றும் இதை அழைப்பதுண்டு. இவை நாம் வளர்க்கும் வீட்டுக்கோழியின் அளவே இருக்கும்.
கம்பீரமாகக் காணப்படும் இவற்றின் கொண்டைப் பகுதியும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தங்க நிறத்திலும், ஆண் சேவலின் வால் பகுதி வளைந்த அரிவாள் போலவும் காணப்படும். சேவல் வெண்புள்ளி கரும்புள்ளி தெளித்த சாம்பல் நிறமாகக் கறுப்பு வால் கொண்டிருக்கும். கழுத்தின் மயிர் போன்ற சிறகுகள் மிக அழகாகக் காணப்படும். பெட்டை மேற்பக்கம் சாம்பல் நிறத்துடன் இருக்கும்.
இவை எப்போதும் தனது ஜோடியுடனேயே காணப்படும். தனது இணையைத் தேடி இவை போடும் சத்தம் தனித்தன்மையுடன் இருக்கும். அதனால், எந்த இடத்தில் காட்டுக் கோழிகள் உள்ளன என்பதை தொலைவில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
ஒரு கூட்டத்தில் ஓர் ஆண் சேவல் மட்டுமே இருக்கும். இந்த கூட்டத்திற்குள் மற்ற சேவல் ஏதேனும் நுழைந்துவிட்டால் அவை சண்டையிடும். இச்சண்டை இரண்டில் ஒன்று கொல்லப்படும்வரை தொடரும்.
இவை லண்டானா எனப்படும் உண்ணிச் செடிகளின் பழங்களைச் சாப்பிடுவதால் அவற்றின் கொட்டைகளை அதிக அளவில் பரப்பி இக்களைகள் அதிகரிப்பிற்கு காரணமாக அமைகின்றன.
இவை தரைவாழ் பறவைகளாக இருந்தாலும் மரங்களில் வசிக்கும் காலங்களில் அந்த மரங்களிலுள்ள பூச்சிகளை உண்டு மரங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு மறைமுகமாக உதவுகின்றன.
இவற்றின் இறைச்சிக்கு மருத்துவக் குணம் உள்ளது என்று யாரோ கிளப்பிவிட்ட புரளியால் இவை அதிக அளவில் கொல்லப்பட்டிருக்கின்றன. நம் வீட்டுக்கோழி வகைகள் இக்காட்டுக் கோழியிலிருந்து உதித்தவையே.
- பாலா பாரதி


No comments:

Post a Comment