Wednesday 28 December 2016

தகைவிலான்

"தலையில்லாமல் ஒரு குருவியால் இருக்கமுடியுமா?"
தகைவிலான் | Barn Swallow |கொட்டப்பட்டு குளம், திருச்சி |நவம்பர்'16

சிட்டுக்குருவியின் அளவுள்ள இக்குருவிகள் பெரும்பாலும் பறந்துக்கொண்டேதான் இருக்கும், சில நேரங்களில் சாலையோரங்களில் மின்கம்பிகளில் கூட்டமாக உட்கார்ந்திருக்கும். இவற்றின் வால் இரண்டாகப் பிளந்து கம்பிபோல் நீட்டிக்கொண்டிருப்பதை வைத்து இவற்றை இனம் காணலாம்.
இந்தியாவின் வடபகுதியிலிருந்து ஆகஸ்ட், செப்டம்பரில் வலசை வரத்தொடங்கும் இவை ஏப்ரல், மே மாதத்தில் திரும்பிச்சென்றுவிடும்.
ஆங்கிலத்தில் Swallows என அழைக்கப்படும் இவை தகைவிலான், தலையில்லாக் குருவி, தம்பாடி என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
எப்போதும் பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்துக்கொண்டு இருப்பதால் தரையில் இல்லாத குருவி எனும் பொருள்படும்படி 'தரைநில்லா குருவி' என அழைக்கப்பட்டு பின்பு அப்பெயர் 'தலையில்லா குருவி' என மாறியிருக்க வேண்டும்.
ஐரோப்பாவில் இக்குருவிகள் மிகவும் பிரபலம். ஐரோப்பியர்கள் இவற்றை "தங்கள் பறவை" (Our Bird) என பெருமையுடன் அழைக்கின்றனர்.
நம்ம மக்கள் இக்குருவியைப்பற்றி என்ன கூறுகிறார்கள் எனத் தெரிந்துகொள்ள நானும், இவற்றைப் படமெடுக்கும்போது அருகில் ஒரு வீட்டில் இருந்தவர்களைக் கேட்டேன,
"அதோ அந்த கம்பியில ஒக்காந்திருக்கே அந்த குருவியப் பத்தி சொல்லுங்களேன்."
"அதா சார்...அது ரொம்ப டேஸ்டா இருக்கும், வீட்ல சின்ன புள்ளங்களுக்கு சளி புடிச்சுச்சின்னா இதபுடிச்சி சூப்பு வெச்சி குடுத்தா சட்னு சரியாயிரும், மத்தபடி ரொம்ப நல்ல குருவி சார்..."
- பாலா பாரதி











No comments:

Post a Comment